த.மா.கா சார்பில் விடியல் சேகர் ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறார்..
ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து களமிறங்கும் விடியல் சேகர்..
சென்னை:அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
த.மா.கா வேட்பாளர்கள்
ஒட்டன்சத்திரம் - விடியல் சேகர் ஈரோடு மேற்கு - யுவராஜா ராணிப்பேட்டை - கார்த்திகேயன் கிள்ளியூர் - நிவின் சைமன் கும்பகோணம் - எம்.கே.ஆர் அசோக் குமார்
ஒட்டன்சத்திரம் - விடியல் சேகர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் தமாகா சார்பில் விடியல் எஸ். சேகர் போட்டியிடுகிறார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுகவின் கோட்டையாகத் திகழ்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திமுக இங்கு வெற்றி பெற்று வருகிறது. அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரத்தில் இதுவரை 6 தேர்தல்களில் தொடர்ந்து வென்றுள்ளார். எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் வென்றால் 7வது தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
விடியல் சேகரும் அமைச்சர் சக்கரபாணியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கொங்கு கவுண்டர் சமூகம் தான் ஒட்டன்சத்திரம் தொகுதியில் பெரும்பான்மையாக இருப்பவர்கள். எனவே, விடியல் சேகர், இந்த தேர்தலில் சக்கரபாணிக்கு டஃப் ஃபைட் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
ஜிகே வாசனின் தீவிர ஆதரவாளரான விடியல் சேகர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநில துணை தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விடியல் சேகர்.
2001 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்திருந்தார் விடியல் சேகர். 2011ல் காங்கேயம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.