சென்னை: 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்ரல் 6) தொடங்கி உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் இன்று திருத்தும் பணி தொடங்கியது.. ரிசல்ட் எப்போது?
சென்னை:பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 89 மையங்களில் இன்று முதல் தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து பொதுத்தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 7,99,692 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை 20 ஆம் தேதிக்குள் முகாம்களில் முடிக்க வேண்டும் எனவும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்திருந்தது.