நடிகர் ராஜேஷ் இன்று காலமானார்.சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் ராஜேஷ். அவருக்கு வயது 75.ஏராளாமான தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சிறந்த குணசித்திர நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் உடல் நல குறைவால் சென்னையில் காலமானார்.





சென்னை:அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவிலும், கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாகவும் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதா பாத்திரமாகவும் நடித்து புகழ் பெற்றவர் கலைமாமணி நடிகர் ராஜேஷ். 150 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ். திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரி, சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியிலும் படித்த ராஜேஷ், பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்தார்.
ஆசிரியர் பயிற்சி முடித்த ராஜேஷ், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சுமார் 7 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார் ராஜேஷ். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசை ஏற்பட்டு, அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்.
1974-ல், அவள் ஒரு தொடர் கதை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 'கன்னிப் பருவத்திலே' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அந்த ஏழு நாட்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். பாலசந்தரின் 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ராஜேஷ் நடித்தார். அதன் பின்னர், ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இப்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார்.
சினிமா நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். 9 புத்தகங்களை எழுதி உள்ளார். உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர் ராஜேஷ். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புரிதல் கொண்டவராகவும் மாறியவர்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக மேற்கொள்ள அந்த நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை ராஜேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.