தேர்தல் பூதம் !
தேர்தல் பூதம் !
மலையை வெட்டி
மடுவை நிரப்பியது !
மேட்டை உடைத்துப்
பள்ளத்தில் கொட்டியது !
கடல்நீர் எடுத்துக்
கலயத்தில் சேர்த்தது !
நுகராக் காற்றை
நுரையீரலுக் களித்தது !
பணக்காரன் உணவைப்
பசித்தவனுக்குத் தந்தது !
செல்வந்தன் காசைச்
செலவாளிக் கீந்தது !
ஏய்ப்போர் பொருளை
ஏமாளிக்கு கொடுத்தது !
காய்த்த மரங்களின்
கனிகிடைக்க செய்தது !
ஆஸ்தியும் உள்ளோரை
அழிக்கவும் வைத்தது !
வேஷ்டியைக் கிழித்துக்
கோவணமாய்க் கொடுத்தது !
ஆலையதிபர் சொத்தை
அடுத்தவர்க்கு கொடுத்தது !
பால்குடிப்போர் சிறுதுளியைப்
பாமரர்க்கு அளித்தது !
பஞ்சாமிர் தமறியோர்க்குப்
பக்கமிருந்து ஊட்டியது !
கஞ்சியைக் குடிப்போர்க்குக்
கறிசோறு போட்டது !
பழையசோறு உண்பவனுக்குப்
பிரியாணி கொடுத்தது !
கலயத்தின் கஞ்சியையும்
கள்ளாக மாற்றியது !
கோபுரத்தின் வெளிச்சத்தைக்
குடிசைக்குள் செலுத்தியது !
பாவத்தின் விமோசனத்தைப்
பக்தனுக்கு அருளியது !
ஆலமர நிழலையும்
அரளிக்குத் தந்தது !
மாளிகையின் பார்வையை
மண்குடிலுக் கீந்தது !
கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் .