சென்னையின் கமிஷனர் மாற்றம் புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் டாப் அதிகாரிகளை டெல்லி மாற்றி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (Director General of Police - Armed Police and Vigilance and Anti-Corruption) இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று சென்னையின் கமிஷனர் மாற்றப்பட்டார். சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

1997 பேட்ச் 'அதிகாரி '! மகாராஷ்டிரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அபின் தினேஷ் மோதக், 1997-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவர். சுமார் 27 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட இவருக்குத் தமிழகத்தின் நாடித் துடிப்பு அத்தனையுமே அப்பட்டமாகத் தெரியும்.


அமலாக்கப் பிரிவில் 'ஸ்ட்ரிக்ட்' ஆபிசர் இந்த நியமனத்திற்கு முன்பாக, சென்னை அமலாக்கப் பிரிவின் கூடுதல் டிஜிபி-யாக (ADGP, Enforcement) பணியாற்றி வந்தார். கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் எனச் சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதில் கறார் காட்டியவர். அதற்கு முன்னதாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) தலைவராக இருந்தபோது, அப்பாவி மக்களை ஏமாற்றிய முக்கிய நிதி நிறுவன மோசடி வழக்குகளைக் கையாண்டு, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்.

 தாம்பரம் கனெக்சன்! சென்னை மக்களுக்கு இவர் புதியவர் அல்ல. தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியபோது, மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டியவர். அந்த அனுபவம் இப்போது சென்னை மாநகரப் பொறுப்பைச் சுலபமாகக் கையாள அவருக்கு உதவும் என்கிறார்கள் சக அதிகாரிகள்.

தேர்தல் ஆணையத்தின் 'சாய்ஸ்' தேர்தல் நேரங்களில் பொதுவாகவே ஆணையம் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகே உயர் அதிகாரிகளை நியமிக்கும். எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடியவர் என்ற அடிப்படையிலேயே அபின் தினேஷ் மோதக் இந்த சீட்டில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

முன்னால் இருக்கும் சவால்கள்! மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இவருக்கு முன்னால் இரண்டு பெரிய சவால்கள் உள்ளன: தேர்தல் பாதுகாப்பு: எவ்வித வன்முறையும் இன்றி தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பது. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்: ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு தடுப்பது. "பணிவு - கனிவு - துணிவு" என்ற காவல்துறையின் தாரக மந்திரத்தோடு, சென்னை மாநகரத்தின் புதிய கமிஷ்னராக களம் இறங்கியிருக்கிறார் அபின் தினேஷ் மோதக். தேர்தல் களத்தில் இவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


See More

Latest Photos