கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி, பெட்டமுகிலாளம் பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட கடமகுட்டை கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இங்கு மொத்தம், 50க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 118 வாக்காளர்கள் உள்ளனர்.
118 வாக்காளர்களுக்காக வனப்பகுதியில் ஓட்டுச்சாவடி; மாவட்ட ஆட்சியர் 6 கிமீ நடந்து சென்று நேரில் ஆய்வு..
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி, பெட்டமுகிலாளம் கிராமத்திலிருந்து கடமகுட்டை, 45 கி.மீ., துாரத்திலும், தர்மபுரி மாவட்டம், அத்திமுட்லு கிராமத்திலிருந்து, 6 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு போக்குவரத்து வசதி கிடையாது. கடமகுட்டை கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஓட்டளிக்க ஏதுவாக, அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதை, மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் இ. ஆ. ப இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட, 6.5 கி.மீ., துாரம் நடந்தே கிராமத்திற்கு சென்று, ஓட்டுச்சவடியை பார்வையிட்டார். அப்போது, பள்ளி வளாகத்தில் புதிதாக, 2 சின்டெக்ஸ் தொட்டி, பைப்லைன் அமைத்து குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்ய, அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி, 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், டீ சர்ட் போன்றவற்றை வழங்கினார். ஆய்வின் போது, மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், பி.டி.ஓ., முருகன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மண்டல அலுவலர் தேசிங்கு ஆகியோர் உடன் இருந்தனர்.