காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட பட்டு நூல் சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் வழியாக குன்றத்தூர், வடபழனி, சென்னை தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் தாம்பரம் மாநில நெடுஞ்சாலையில் அபாயம்… உயிருக்கு ஆபத்தான பாதாள சாக்கடை தொட்டி
காஞ்சிபுரம் :ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட பட்டு நூல் சத்திரம் பகுதியில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் வழியாக குன்றத்தூர், வடபழனி, சென்னை தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பரபரப்பான பாதையாக உள்ளது. குறிப்பாக பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவிற்கு செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தொட்டிகளின் மூடிகள் தரமின்றி அமைக்கப்பட்டதால் அடிக்கடி சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகின்றன. சுமார் 100 மீட்டர் இடைவெளிக்கு ஒருமுறை 3 அடி அகலம் 10 அடி ஆழம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜங்ஷன் பகுதிகள் தற்போது வாகன ஓட்டிகளுக்கு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த உடைந்த குழிகளில் விழும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் கனரக வாகனங்கள் இந்த உடைந்த சாக்கடை மூடிகளின் மீது ஏறி இறங்கும் போது வெளிப்பட்ட இரும்புக் கம்பிகள் டயர்களை கிழித்து விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயமும் நிலவுகிறது.
இதனால் தினமும் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலை துறையும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்து, விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.